Wednesday, March 30, 2011

கிரிக்கெட் "போர்: இந்தியா "சூப்பர் வெற்றி! * பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது.....

மொகாலி: உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
அஷ்வின் நீக்கம்:
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, நெஹ்ரா இடம் பெற்றார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அக்தருக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார்.
சேவக் "சரவெடி:
இந்திய அணிக்கு வழக்கம் போல் சேவக் அதிரடி துவக்கம் தந்தார். குல் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரியு அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுக்கப்பட, குல்லை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்துர் ரசாக் ஓவரில் சச்சின், சேவக் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து குல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த சேவக்கின் சரவெடி ஆட்டம் நீண்ட நேரம் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஏங்கினர். ஆனால், வகாப் ரியாஸ் சிக்கலை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் "ரிவியு முறையில் சேவக் 38 ரன்களுக்கு(9 பவுண்டரி) அவுட்டானார்.
வகாப் மிரட்டல்:
அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி கொடுக்க, சச்சின் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். முகமது ஹபீஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பிர்(27), கம்ரான் அக்மலின் துல்லிய "ஸ்டம்பிங்கில் வீழ்ந்தார். போட்டியின் 26வது ஓவரை வீசிய வகாப் ரியாஸ் இரட்டை "அடி கொடுக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ந்து போயினர். 2வது பந்தில் விராத் கோஹ்லியை(9) வெளியேற்றினார். 3வது பந்தில் யுவராஜ் சிங்கை(0) போல்டாக்க, மொகாலி அரங்கமே அமைதியானது. அப்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து திணறியது. அடுத்து வந்த தோனி தடுத்து ஆட, ரியாசின் "ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.
சச்சின் அபாரம்:
இதற்கு பின் சச்சின், தோனி இணைந்து நிதானமாக ஆடினர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தால், ஸ்கோர் விரைவாக உயரவில்லை. ஒரு நாள் போட்டிகளில் தனது 95வது அரைசதம் அடித்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடிக்க தவறினார். இவர் 85 ரன்களுக்கு(11 பவுண்டரி) சயீத் அஜ்மல் சுழலில் வீழ்ந்தார். வகாப் ரியாஸ் "வேகத்தில் தோனியும்(25) நடையை கட்டினார்.
ரெய்னா அசத்தல்:
கடைசி கட்டத்தில் "பேட்டிங் பவர்பிளேயை பயன்படுத்தி சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். <உமர் குல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். ஹர்பஜன் 12 ரன்கள் எடுத்தார். ஜாகிர் கானை(9) வெளியேற்றிய வகாப் ரியாஸ், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நெஹ்ரா(1) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது.
திணறல் ஆட்டம்:
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஜாகிர் கான் பந்தில் கம்ரான் அக்மல்(19) காலியானார். ஓரளவுக்கு தாக்குப்படித்த ஹபீஸ் 43 ரன்களுக்கு முனாப் வேகத்தில் அவுட்டானார். மீண்டும் ஒரு முறை சுழலில் மிரட்டிய யுவராஜ் சிங், அசாத் ஷபிக்(30), அனுபவ யூனிஸ் கானை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் யுவராஜ் சிங் பந்துவீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் உமர் அக்மல். இவர், ஹர்பஜன் வலையில் 29 ரன்களுக்கு அவுட்டானார். முனாப் பந்தில் அப்துல் ரசாக்(3) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். 
அப்ரிதி ஏமாற்றம்:
கடைசி கட்டத்தில் கேப்டன் அப்ரிதி, மிஸ்பா -உல்-ஹக் இணைந்து போராடினர். இதில், மிஸ்பா "ஆமை வேகத்தில் ஆட, "ரன் ரேட் எகிறியது. இந்த பதட்டத்தில் ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற அப்ரிதி(19), பரிதாபமாக அவுட்டாக, பைனல் கனவு முடிவை நெருங்கியது. 
தாமதம் ஏன்?:
"பேட்டிங் பவர்பிளேயை மிகவும் தாமதமாக 46வது ஓவரில் பாகிஸ்தான் எடுத்தது வியப்பை தந்தது. அப்ரிதி போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருக்கும் போன் ஏன் "பவர்பிளேயை பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பச் செய்தது. நெஹ்ரா வேகத்தில் ரியாஸ்(8), குல்(2) பெவிலியன் திரும்பினர். போராடிய மிஸ்பா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இவர் 56 ரன்களுக்கு வெளியேற, பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறியது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
அபார வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் ஏப்., 2ம் தேதி மும்பையில் நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஸ்கோர் போர்டு
இந்தியா
சேவக்-எல்.பி.டபிள்யு.,(ப)ரியாஸ்    38(25)
சச்சின்(கே)அப்ரிதி(ப)அஜ்மல்    85(115)
காம்பிர்(ஸ்டம்)கம்ரான்(ப)ஹபீஸ்    27(32)
கோஹ்லி(கே)உமர்(ப)ரியாஸ்    9(21)
யுவராஜ்(ப)ரியாஸ்    0(1)
தோனி-எல்.பி.டபிள்யு.,(ப)ரியாஸ்    25(42)
ரெய்னா--அவுட்இல்லை-    36(39)
ஹர்பஜன்(ஸ்டம்)கம்ரான்(ப)அஜ்மல்    12(15)
ஜாகிர்(கே)கம்ரான்(ப)ரியாஸ்    9(10)
நெஹ்ரா--ரன்அவுட்-(ரியாஸ்/கம்ரான்)    1(2)
முனாப்-அவுட்இல்லை-    0(0)
உதிரிகள்    18
மொத்தம் (50 ஓவரில், 9 விக்.,)    260
விக்கெட் வீழ்ச்சி: 1-48(சேவக்), 2-116(காம்பிர்), 3-141(கோஹ்லி), 4-141(யுவராஜ்), 5-187(சச்சின்), 6-205(தோனி), 7-236(ஹர்பஜன்), 8-256(ஜாகிர்), 9-258(நெஹ்ரா).
பந்துவீச்சு: உமர்குல் 8-0-69-0, ரசாக் 2-0-14-0, ரியாஸ் 10-0-46-5, அஜ்மல் 10-0-44-2, அப்ரிதி 10-0-45-0, ஹபீஸ் 10-0-34-1.
பாகிஸ்தான் 
கம்ரான்(கே)யுவராஜ்(ப)ஜாகிர்    19(21)
ஹபீஸ்(கே)தோனி(ப)முனாப்    43(59)
ஷபிக்(ப)யுவராஜ்    30(39)
யூனிஸ்(கே)ரெய்னா(ப)யுவராஜ்    13(32)
மிஸ்பா(கே)கோஹ்லி(ப)ஜாகிர்    56(76)
உமர்(ப)ஹர்பஜன்    29(24) -
ரசாக்(ப)முனாப்    3(9)
அப்ரிதி(கே)சேவக்(ப)ஹர்பஜன்    19(17)
ரியாஸ்(கே)சச்சின்(ப)நெஹ்ரா    8(14)
உமர்குல்-எல்.பி.டபிள்யு.,(ப)நெஹ்ரா    2(3)
அஜ்மல்-அவுட்இல்லை-    1(5)
உதிரிகள்    8
மொத்தம் (49.5 ஓவரில், "ஆல்-அவுட்)    231
விக்கெட் வீழ்ச்சி: 1-44(கம்ரான்), 2-70(ஹபீஸ்), 3-103(ஷபிக்), 4-106(யூனிஸ்), 5-142(உமர்), 6-150(ரசாக்), 7-184(அப்ரிதி), 8-199(ரியாஸ்), 9-208(உமர்குல்), 10-231(மிஸ்பா).
பந்துவீச்சு: ஜாகிர் 9.5-0-58-2, நெஹ்ரா 10-0-33-2, முனாப் 10-1-40-2, ஹர்பஜன் 10-0-43-2, யுவராஜ் 10-1-57-2.
"லக்கி சச்சின்
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பக்கம் நேற்று அதிர்ஷ்டக் காற்று அதிகமாக வீசியது. 6 முறை கண்டம் தப்பிய இவர், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் விபரம்...
* 11வது ஓவரில் சயீத் அஜ்மல் வீசிய 4வது பந்தில் சச்சினுக்கு(23 ரன்), அம்பயர் இயான் கோல்டு எல்.பி.டபிள்யு., கொடுத்தார். இதனை எதிர்த்து அம்பயர் தீர்ப்பு மறுபரீசிலனை(யு.டி.ஆர்.எஸ்.,) முறையில் சச்சின் "அப்பீல் செய்தார். "டிவி ரீப்ளேவில் பந்து "லெக் திசையில் செல்வது உறுதி செய்யப்பட, "அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். டி.ஆர்.எஸ்., வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்த சச்சின், தற்போது அதே முறையில் பலன் அடைந்துள்ளார்.
* 11வது ஓவரின் 5வது பந்தில் கம்ரான் அக்மல் "ஸ்டம்பிங் செய்தார். "ரீப்ளேவில் சச்சின்(23 ரன்) கால் "கிரீசில் இருந்தது உறுதியாக, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* 14வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(27 ரன்) கொடுத்த எளிய "கேட்ச் வாய்ப்பை மிஸ்பா கோட்டை விட்டார்.
* 20வது ஓவரில் மீண்டும் அப்ரிதி பந்தில் சச்சின்(45 ரன்) அடித்த பந்தை யூனிஸ் கான் தவற விட்டார்.
* 30வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(70 ரன்கள்) கொடுத்த கடின "கேட்ச்சை கம்ரான் அக்மல் பிடிக்க தவறினார்.
* 35வது ஓவரில் ஹபீஸ் பந்தில் சச்சின்(81 ரன்கள்) அடித்த பந்தை உமர் அக்மல் கோட்டை விட்டார்.
அப்ரிதி பந்துவீச்சில் மட்டும் மூன்று முறை சச்சின் தந்த "கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் நழுவ விட்டனர். ஆனால், சயீத் அஜ்மல் பந்தில் சச்சின் தந்த "கேட்ச்சை அப்ரிதி "சூப்பராக பிடித்து சச்சினின்(85 ரன்கள்) அதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரதமர்கள்-வீரர்கள் அறிமுகம்

நேற்று இரு நாடுகளின் தேசிய கீதம் இசைத்து முடித்தபின், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி இருவரும், மைதானத்தில் இருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்தினர். பாகிஸ்தான் வீரர்களை அப்ரிதியும், இந்திய வீரர்களை கேப்டன் தோனியும், இரண்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
---
அரசு விடுமுறை
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியை, வீட்டில் இருந்து கண்டுகளிக்க வசதியாக, நேற்று பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரைநாள் விடுப்பு வழங்கியது. இதைப் பின்பற்றிய மத்தியபிரதேசம், டில்லி அரசும் தங்கள் ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு கொடுத்தன. இதுகுறித்து டில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில்,"" பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண, மதியம் முதல் விடுமுறை கொடுக்கப்படுகிறது, என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல, பாகிஸ்தானில் நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
---
சேவக், தோனி "1000
நேற்றைய அரையிறுதி போட்டியில் சேவக் (1,036), இந்திய அணி கேப்டன் தோனி (1,001) ஆகியோர், பாகிஸ்தானுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினர். இதற்கு முன் சச்சின் (2,489), அசார் (1,657), டிராவிட் (1,652), கங்குலி (1,652), யுவராஜ் சிங் (1,251) ஆகியோர் ஆயிரம் ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர்.
--
"டாஸ் ஏலம்
பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியில், "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். இதற்கு பயன்படுத்திய நாணயத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஏலம் விட முன்வந்துள்ளது.
--
"கரண்ட் கட் இல்லை
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண வசதியாக, தமிழகத்தில் நேற்று மின்வெட்டு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அதிகமுறை "மின்வெட்டு மூலம் "ஷாக் தந்தனர். அதேநேரம் மகாராஷ்டிரா அரசு, வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக 1000 "மெகா வாட் மின்சாரத்தை பெற்று, மதியம் 2 முதல் இரவு 11 மணி வரை, மின்வெட்டு இல்லாமல், தடங்கலின்றி போட்டியை காண வசதி செய்தனர்.
---
பிரபலங்களின் படையெடுப்பு
மொகாலி போட்டியைக் காண இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களுடன், அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் வந்திருந்தனர். தவிர, பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், புபிந்தர் சிங் ஹோடா, கவர்னர் சிவராஜ் படேல், பாலிவுட் நட்சத்திரங்கள் அமிர் கான், ஷக்தி கபூர் உள்ளிட்ட பலரும் போட்டியை ரசித்தனர். 3 வாரத்துக்கு முன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட, காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தி, வி.ஐ.பி., பகுதியில் அமர்ந்து போட்டியை பார்த்தார். திடீரென பாதுகாப்பை மீறி ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்று, அவர்களுடன் அமர்ந்து பார்க்கத்துவங்கினார்.
--
ஐ.சி.சி., மன்னிப்பு
 தேசிய கொடியை விற்கும் உரிமையை, ஐ.சி.சி.,யிடம் பெற்றிருந்த வியாபாரி ஒருவர், மூவர்ணத்தில் ஆன பலூனை காலில் போட்டு மிதித்துள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.சி.சி., கூறுகையில்,"" நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக, ஒவ்வொரு இந்தியரிடமும் ஐ.சி.சி., மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது, என தெரிவித்துள்ளது.
--
பாக்., பிரதமருக்கு விருந்து
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய, உலக கோப்பை அரையிறுதி போட்டியை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் மொகாலி மைதானத்தில் நேரில் பார்த்தனர். இவர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், நேற்று இரவு விருந்து கொடுக்கப்பட்டது. இதில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஆசாத் சபிக், யூனிஸ் கானை, யுவராஜ் சிங் வெளியேற்றினார்.
--

2 comments:

Laksman said...

சச்சின் அபாரம்:"Yes really Great"
தோனி திணறல் ஆட்டம்:"Yes Really always Poor"
He is lowest score performer in World Cup Indian Team squad.

"வாங்கடே வின் வாசல் சச்சின் இன் வருகைக்காக காத்திருகிறது.. .. தட்டுறோம் கப் எ துக்குறோம்.. .. dhak dhak go INDIA go.. .."

Unknown said...

Dhoni thinking never change in any time ...,

Post a Comment